கலைந்தது இங்கிலாந்தின் கனவு: இறுதி போட்டிக்கு தெரிவானது அர்ஜென்டினா
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் 92-வது நிமிடத்தில் லாடாரோ மார்டினெஸ் அடித்த வெற்றி கோல் மூலம் இறுதிப் போட்டிப் வாய்ப்பை அர்ஜென்டினா உறுதி செய்துள்ளது.
புதன்கிழமை அன்று அட்லாண்டாவில் உள்ள மைதானத்தில் 68,239 ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது பாதியின் 10-வது நிமிடத்தில், இங்கிலாந்து வீரர் ஆண்டனி கார்டன் அடித்த கோல் மூலம் அந்த அணி முன்னிலை பெற்றது.
இதன் மூலம் 1966-க்குப் பிறகு இங்கிலாந்து தனது முதல் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான போட்டி எப்போதுமே மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. இந்த ஆட்டமும் அர்ஜென்டினா வரலாற்றில் ஒரு காவியமாக நினைவுகூரப்படும்.
ஏனெனில், போட்டியின் கடைசி நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து இங்கிலாந்தின் கனவை அர்ஜென்டினா தகர்த்தது.
மெஸ்ஸியின் துல்லியமான பாஸை (Pass) பெற்று என்ஸோ பெர்னாண்டஸ் கோல் அடித்து போட்டியை 1-1 என சமன் செய்தார்.
92-வது நிமிடம் (கூடுதல் நேரம்): ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு (Extra time) செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெஸ்ஸியின் அற்புதம் வாய்ந்த கிராஸ் (Cross) பந்தை, மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த லாடாரோ மார்டினெஸ் தலையால் முட்டி (Header) கோலாக்கினார்.
1986 உலகக் கோப்பையில் டியாகோ மரடோனாவின் புகழ்பெற்ற ஆட்டத்திற்கு இணையாக இது இல்லை என்றாலும், இந்த இரண்டு கோல்களும் அர்ஜென்டினாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து, அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் அவர்களின் நம்பிக்கையை உயிர்ப்பித்துள்ளன.
வரலாற்றுச் சாதனையின் விளிம்பில் மெஸ்ஸி
1962-ல் பிரேசில் அணிக்குக்குப் பிறகு எந்தவொரு அணியும் உலகக் கோப்பை மகுடத்தைத் தக்க வைத்துக் கொண்டதில்லை. உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய இரு அணிகள் மட்டுமே தங்களது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளன.
இப்போது, பிரேசிலின் புகழ்பெற்ற வீரர் கஃபுவிற்கு (Cafu) பிறகு மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறவுள்ளார். தனது 39 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற மெஸ்ஸி, இப்போது ஒரு அதிகாரப்பூர்வப் போட்டியில் முதல்முறையாக ஸ்பெயினை எதிர்கொள்ளவிருக்கிறார்.
ஏமாற்றத்தில் இங்கிலாந்து
60 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குச் செல்லும் இங்கிலாந்தின் கனவு மிக அருகில் வந்து கைநழுவிப் போனது. கார்டன் கோல் அடித்த பிறகு, இங்கிலாந்து அணி தற்காப்பு ஆட்டத்திற்கு (Sitting back) மாறியதே அவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
தாமஸ் டுஹெலின் (Thomas Tuchel) பயிற்சியின் கீழ் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட ஜூட் பெலிங்ஹாம் மற்றும் கேப்டன் ஹாரி கேன் ஆகிய முக்கிய வீரர்கள் இந்த முக்கியமான போட்டியில் சோபிக்கத் தவறினர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்திலேயே சோகத்தில் மூழ்கினர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகாலப் பகை காரணமாக, போட்டி ஆரம்பம் முதலே பெரும் பதற்றத்துடனேயே நகர்ந்தது. அர்ஜென்டினா வீரர்கள் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பிலும், இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் ஆக்ரோஷமாக விளையாடினர்.
அடுத்ததாக, 48 அணிகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் அமெரிக்க சாம்பியனான அர்ஜென்டினாவும், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயினும் மோதவுள்ளன.




