காசா அமைதி முயற்சி தடம் புரளுமா? ஹமாஸ் ஆயுதக் குறைப்புத் திட்டம் நிராகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த காசா அமைதி முயற்சியில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
காசாவில் ஆயுதக் குறைப்பை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக, பேச்சுவார்த்தைகளில் நன்கு அறிந்த ஒரு மூத்த பலஸ்தீனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சியில் காசாவின் உயர் பிரதிநிதியாக செயல்படும் நிக்கோலாய் மிலாடெனோவ், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஒக்டோபரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டமாக காசாவை இராணுவமயமற்றதாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், முதல் கட்ட நிபந்தனைகளை இஸ்ரேல் முழுமையாக செயல்படுத்தும் வரை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமாட்டோம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆயுதக் குறைப்பில் முன்னேற்றம் இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, கெய்ரோவில் உள்ள ஹமாஸ் பிரதிநிதிகள், எகிப்தின் உளவுத்துறைத் தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஹமாஸ் தடுத்து வைத்திருந்த இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதுடன், இஸ்ரேல் சிறையில் இருந்த பலஸ்தீனிய கைதிகள் மாற்றாக விடுவிக்கப்பட்டனர்.
மேலும், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் பகுதியளவில் பின்வாங்கியிருந்தன.





