தீவிரமடைகிறது ‘எல் நினோ’!
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் ‘எல் நினோ’ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருகின்றது.
இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது.
இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிவெப்பமடையும் போது ஏற்படும் ஒரு உலகளாவிய காலநிலை மாற்றமாகும்.
பொதுவாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றுகள் பலவீனமடைவதால், கடலின் வெப்பமான நீர் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியை நோக்கிப் பரவத் தொடங்குகிறது.
இந்த மாற்றத்தால் உலகெங்கும் காற்றின் திசையும், வளிமண்டல அழுத்தமும் மாறி, சில நாடுகளில் கடுமையான வறட்சியையும், சில நாடுகளில் கோர வெள்ளத்தையும் உருவாக்குகிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சாதாரணமாக இருந்த பசிபிக் கடல் சூழல், பின்னர் ‘லா நினா’ எனப்படும் குளிர்ச்சியான நிலைக்கு மாறி, தற்போது மீண்டும் அதிவெப்பமடைந்து எல் நினோ நிலையை எட்டியுள்ளது.
கடந்த மே மாத கணக்கெடுப்பின்படி, பசிபிக் பெருங்கடல் மட்டுமன்றி, இந்தியாவின் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதிகளும் வழக்கத்தை விட அதிக வெப்பத்துடன் காணப்படுகின்றன.
அதேவேளை, எல் நினோவால் ஏற்படும் சவாலை எதிர்கொள்வதற்கு இலங்கையும் தயாராகிவருகின்றது.




