மாகாணசபைத் தேர்தலை முடக்க சதி: சுரேஷ் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஒட்டுமொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசு தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
” அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் எனக் கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது.” – என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலுக்காகக் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியானது, ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுவிட்டதால், இந்த வருடம் தேர்தல் நடத்தப்படமாட்டாது என ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியிருந்தால், அது நாடாளுமன்றத்திலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஜனாதிபதியோ, அமைச்சரவைப் பேச்சாளரோ பேச வேண்டிய விடயங்களை, அரசில் எந்தப் பதவியும் இல்லாத ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், தானே அரசை நடத்துவது போன்ற தொனியில் பேசுவது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விசேட தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது பலமுறை கூடி ஆராய்ந்து வரும் பின்னணியில், ரில்வின் சில்வாவின் இந்த அறிவிப்பு தேர்தல் முடக்கச் சதியை வெளிப்படுத்துகின்றது.
தமிழ் மக்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தாங்கள் தீர்க்கப்போவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசு, வட பகுதி மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கவில்லை. .” – என்றார்.





