சூடுப்பிடிக்கும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் அதிரடி
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை ஈரான் உறுதிப்படுத்துவதால், அதற்குக் கைமாறாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதைய போரை நிறுத்துவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்றாக, “ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் அதிகாரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்” என்பது உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த நீரிணை ஊடாகவே இடம்பெறுவதால், ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.





