எந்தவொரு பதற்றத்திற்கும் வொஷிங்டன் பொறுப்பேற்க வேண்டும் – வடகொரியா சவால்
அமெரிக்கா தலைமையிலான கடற்படைப் பயிற்சியில் தென்கொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டை ஒரு “கைப்பாவை” என்று வடகொரிய அரசு ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
அப்பகுதியில் ஏற்படக்கூடிய எந்தவொரு “கணிக்க முடியாத பதற்றத்திற்கும்” சியோலும் வொஷிங்டனும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வடகொரிய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் சமீபத்தில் தென்கொரிய-ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பும், நேட்டோவுடனான தென்கொரியாவின் உறவும் வலுப்பெற்று வருவதையும் வடகொரியா சாடியுள்ளது.
கடந்த வாரம் ஹவாயில் நடைபெற்ற பசிபிக் விளிம்புப் பயிற்சிக்குப் (RIMPAC) பிறகு, வடகொரியாவின் இந்த விமர்சனம் வந்துள்ளது.
இந்தப் பயிற்சியில், முதல் முறையாக தென்கொரிய கடற்படை, கடற்படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கியது.
உலகின் மிகப்பெரிய சர்வதேச கடற்படைப் பயிற்சியாகக் கருதப்படும் இந்தப் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
RIMPAC இணையதளத்தின்படி, இந்த ஆண்டு ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சுமார் 30 நாடுகள் இந்த பயிற்சியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.




