ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணியோம்: ஸ்பெயின் பிரதமர் திட்டவட்டம்!
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணிந்து தமது முடிவை மாற்றப்போவதில்லை என்று ஸ்பெயின் Spanish பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sanchez திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு ஸ்பெயின் போர்க்கொடி தூக்கியுள்ளது.
தமது நாட்டிலுள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது.
இதனால் கடுப்பாகிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம் ” என கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்பெயின் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ்,
“வெறும் வர்த்தகப் பழிவாங்கல்களுக்கு பயந்து, உலகிற்கு கேடு விளைவிக்கும் செயலுக்கு நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம்.
இது எங்கள் கொள்கை மற்றும் நலன்களுக்கு எதிரானது ” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு முக்கிய ராணுவத் தளங்கள் குறித்து பேசிய டிரம்ப் “ஸ்பெயின் அனுமதி அளிக்காவிட்டாலும், நாங்கள் நினைத்தால் அங்கு விமானங்களை இறக்கி பயன்படுத்த முடியும் ” என தன்னிச்சையாக கூறினார்.
காசா போரின் போது இஸ்ரேலை விமர்சித்த ஸ்பெயின், இப்போது ஈரான் விவகாரத்திலும் அமெரிக்காவை எதிர்ப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





