” பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை”
“பிரபாகரனை உயிருடன் பிடிக்கும் திட்டம் இருக்கவில்லை. புலிகள் அமைப்பை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே திட்டங்களை வகுத்தேன்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ புலிகளை உயிருடன் பிடித்து அவர்களுடன் பேச்சு நடத்தும் நோக்கில் நான் போர் வியூகம் வகுக்கவில்லை. பிள்ளையானை முதல்வராக்கினார்கள். கருணாவை நாடாளுமன்றம் அனுப்பினார்கள்.
பிரபாகரனை உயிருடன் பிடித்திருந்தால் இப்படி எதாவது நடக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் இறுதி கட்டத்திலும் இவர்கள் (ராஜபக்சக்கள்) பேச்சு நடத்தினார்கள்.
எனக்கு இப்படியான எண்ணம் இருக்கவில்லை. புலிகளை முற்றாக துடைத்தெறிய வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. அதற்கேற்ற வகையிலேயே திட்டம் வகுக்கப்பட்டது.
மே 19 ஆம் திகதி பொதுமக்களுடன் இணைந்து வந்து 6 ஆயிரம் வரையான புலிகள் சரணடைந்தார்கள். ஆயுதங்கள் மற்றும் சயனட் என்பவற்றை ஒப்படைத்தனர். அதன்பின்னரும் சிலர் வந்தனர்.
சரணடைவதாக இருந்திருந்தால் இராணுவத்திடம் வந்து சரணடைந்திருக்கலாம். பிரபாகரனும் சரணடைந்திருக்கலாம். ஏனெனில் சரணடைந்தவர்களை நாம் சுடவில்லை.
ஆனால், பிரபாகரன் தரப்பும், மஹிந்தவும் பேச்சு நடத்திக்கொண்டிருந்தனர். இது பற்றி இராணுவ தளபதியான எனக்கு தெரியப்படுத்தப்படவில்லை.” – என்றார் பொன்சேகா.
அதேவேளை, பிரபாகரனின் மனைவி, மகன், மகன் உள்ளிட்டோர் இறந்துவிட்டனர் எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.




