அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவிற்கு நுழைய முயன்ற 97 ஆயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நுழைய முயன்ற இந்த இந்தியர்களில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையின் தரவுகளுக்கமைய, 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
2019- 2020ஆம் ஆண்டுகளில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கையை விட, இது 5 மடங்கு அதிகம் ஆகும்.
கைது செய்யப்பட்டவர்களை 4 பிரிவுகளின் கீழ் அமெரிக்க அரசு வகைப்படுத்தி உள்ளது. துணையில்லாத குழந்தைகள், குடும்பங்களோடு வரும் குழந்தைகள், குடும்பத்தோடு வருபவர்கள், வயது வந்த தனி நபர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதில், தனிநபர்களே அதிகளவில் வருகின்றனர். அமெரிக்க சுங்க எல்லைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கைதானவர்களில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.
சுமார் 30 ஆயிரம் பேர் கனடா எல்லையிலும், 41 ஆயிரம் பேர் மெக்சிகோ எல்லையிலும், மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.