சரியாகத் தூங்கவில்லை என்றால் காத்திருக்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மனித வாழ்க்கைக்கு உணவும் தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, உறக்கமும் அவ்வளவு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உணவுக்காக நேரத்தை ஒதுக்கிச் செலவழிப்பதைப்போல, உறக்கத்திற்கும் நாம் நேரத்தைச் செலவிட வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால், உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில், சரியான கால அளவில் தூங்குபவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லை.
ஆனால், சரியாகத் தூங்கவில்லை என்றால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று குவைத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
டிடிஐ என்னும் ஆய்வு மையம் 227 பேரை 24 மணி நேரம் விழித்திருக்க வைத்தனர். அதற்குப் பின் பரிசோதித்துப் பார்த்ததில் இவர்களின் உடலில் நான் கிளாஸிக் மோனோசைட்ஸ் ((Non-classical Monocytes)) என்ற வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரித்ததைக் கண்டறிந்தனர்.
சரியாகத் தூங்காதவர்களுக்கு இந்த செல்கள் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்திக்கான இந்த செல்கள் உடலில் நோய் இருக்கும்போது பெருகி நோய்க்கு எதிராக வினைபுரிய வேண்டும்.
ஆனால் இவை சாதாரண நேரத்தில் அதிகரித்தால் வயிற்று வலி முதல் புற்றுநோய் வரை பல்வேறு உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வேலை நேரமும் சூழலும் தொடர்ந்து மாறுவது, அதிக நேரம் கணினி உள்ளிட்ட திரைகளைப் பார்ப்பது ஆகியவற்றால் தூக்கமின்மைப் பிரச்சினை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.