இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்தார் இலங்கை பாதுகாப்பு செயலர்
இலங்கை பாதுகாப்பு செயலர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த , இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கை பாதுகாப்பு செயலர், 5வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்திற்கு கலந்துக் கொள்வதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சிநேகபூர்வ சந்திப்பின் போது , நாடுகடந்த குற்றங்களை எதிர்கொள்வதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் சவால்கள், இணையவழி குற்றங்கள், மனிதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், தேடப்படும் குற்றவாளிகளை நாடுகடத்தல் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.




