சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி போராட்டம்
சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக இன்று (13) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
“நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கவைத் (HEMWG Dissanayake) தொடர்பு கொண்டு கேட்டபோது:
“குறித்த நியமன விவகாரமானது மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கும் கிழக்கு மாகாண சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, இங்கு ஆர்ப்பாட்டம் செய்வதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை. இது தொடர்பான தங்களின் ஆட்சேபனை மனுவை கிழக்கு மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பதே சிறந்தது” என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று, தங்களுக்கு நிரந்தர நியமனங்களைப் பெற்றுத்தருமாறு கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.




