“அரசியலையும், அபிவிருத்தியையும் பிரிக்க முடியாது” – பிரிட்டனில் பிரதமர் உரை!
“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பிரைட்டன் நகரில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியல், நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு இடையிலான பரஸ்பர உறவு குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விரிவாக விளக்கினார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கும் அதேவேளையில், ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பேணி, நாட்டின் பொருளாதார மீட்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளைச் சமநிலைப்படுத்துவதில் உள்ள சவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தேசிய பொருளாதாரத்தில் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரிப்பதே தற்போதைய அரசின் கொள்கை ரீதியான இலக்காகும்.
குறிப்பாகப் பராமரிப்புத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.” – என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான பீடத்தில் விசேட உரையாற்றவுள்ளதுடன், அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.





