சிறைச்சாலை கலவரம்: துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிக்கு இடமாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரி, விசாரணைகள் முடியும் வரை பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைத்துறை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 6 ஆம் திகதி, கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் இறுதி மரக் கதவை உடைத்துக் கொண்டு தப்பியோட முயன்றபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
கைதிகள் சிறை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவுமே அந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதா அல்லது அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய சிறப்பு விசாரணை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

