இலங்கையில் தேசிய வரி வாரம் ஆரம்பம்
“வரி சக்தி 2026” எனும் தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே உள்ள எதிர்மறையான எண்ணத்தை நேர்மறையான எண்ணமாக மாற்றி, நாட்டில் சுயமாக வரி செலுத்தும் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் “வரி சக்தி 2026” என்பது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் ஒரு வேலைத்திட்டமாகும்.
இதன் ஆரம்பத்தைக் குறிக்கும் விசேட தேசிய வரி வாரம் இன்று (06) முதல் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு இணையாக ஊடக மற்றும் ஊக்கப்படுத்தல் வேலைத்திட்டமொன்றும் செயல்படுத்தப்படுவதுடன், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற பல்வேறு பிரச்சாரத் திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து, வரி இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்காக பொதுமக்களை நேரடியாக விழிப்புணர்வூட்டல் இடம்பெறும்.
இதன் ஆரம்ப நிகழ்வின் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, “வரி சக்தி 2026” என்பது வெறும் வரிகளை வசூலிக்கும் செயற்பாடு மாத்திரமன்றி, அது நாட்டை நேசிக்கும் மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாகும் என்று குறிப்பிட்டார்.




