அரசியல் பரபரப்பு – மால்டோவா பிரதமர் திடீர் ராஜினாமா
மால்டோவா Moldova நாட்டின் பிரதமர் அலெக்சாண்ட்ரு முன்டீனு (Alexandru Munteanu) தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெள்ளிக்கிழமை (03) திடீரென அறிவித்துள்ளார்.
இந்த எதிர்பாராத அறிவிப்பால் அந்நாட்டில் அரசியல் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பிரதமராகப் பணியாற்றி வரும் முன்டீனு, இந்த முடிவை எடுத்ததற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“இன்றுடன் பிரதமராக எனது பதவிக்காலம் நிறைவடைகிறது.
எனது கொள்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இணங்க என்னால் இனிமேலும் இந்த மக்கள் ஆணையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை உணர்ந்த கணத்தில், நான் பதவியிலிருந்து விலகத் தேர்ந்தெடுத்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மால்டோவா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) இணைவதற்கான வேட்பாளர் தகுதியைப் பெற்றுள்ள ஒரு நாடாகும்.
உக்ரைனுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் உறுப்பினராக உள்ள ருமேனியாவுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு சிறிய முன்னாள் சோவியத் குடியரசு நாடே மால்டோவா என்பது குறிப்பிடத்தக்கது.





