திறைசேரி நிதி மாயமான விவகாரம் : CIDக்கு கோட்டை நீதவான் பிறப்பித்த உத்தரவு
திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிபதி குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நீதிமன்றத்தில் ஆஜரான குற்றப் புலனாய்வுத் துறை, விசாரணை தொடர்பாகப் பெறப்பட்ட 16 டெராபைட் கணினித் தரவுகளைக் கொண்ட வன்வட்டுகள் மேலதிக பகுப்பாய்விற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்தது.
பல்கலைக்கழகத்திடமிருந்து தொடர்புடைய அறிக்கைகளும், அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளும் இன்னும் பெறப்படவில்லை என்றும் சி.ஐ.டி மன்றில் குறிப்பிட்டது.
சி.ஐ.டியினரின் கருத்துக்களை செவிமெடுத்த நீதவான் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆகஸ்ட் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.




