முடிவுக்கு வருகிறது ஈரான், அமெரிக்கா போர்? இன்று முக்கிய தீர்மானம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பேச்சுவார்த்தைகள் இன்னும் முன்னேற்றக் கட்டத்திலேயே உள்ளன. நேற்று இரவே சில நல்ல செய்திகள் வெளியாகும் என எதிர்பார்த்தோம், அநேகமாக அது இன்று கிடைக்கலாம்.
உலகின் 20 சதவீத எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் முக்கிய நீர் வழியான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் தடையின்றி திறந்து விடுவது தொடர்பாக, ஒரு வலுவான திட்ட வரைவு தற்போது விவாதத்தில் உள்ளது.
எனினும், ஈரானிடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் வர சிறிது காலம் எடுக்கும் என்பதால், இப்போதே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது” என மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தம் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக, இன்று திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளதுடன், ஆசியப் பங்குச் சந்தைகள் உயர்வைச் சந்தித்துள்ளன.
போர்நிறுத்த நீடிப்பு, ஹார்முஸ் நீரிணை திறப்பு மற்றும் அணுசக்தித் திட்டம் என்பன உட்பட பல முக்கிய அம்சங்கள் இந்தப் புதிய உடன்படிக்கையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.





