அரசியலுக்கு வருகிறாரா முன்னாள் ராணுவ சவேந்திர சில்வா?
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, வடமத்திய மாகாணசபை முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என வெளியாகும் தகவலை ஐமச SJP நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நிராகரித்துள்ளார்.
சவேந்திர சில்வா வடமத்திய மாகாணசபையின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார் எனவும், அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனுக்கு நெருக்கமானவர் எனவும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சனிடம், சிங்கள ஊடகமொன்று வினவியது.இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியவை வருமாறு ,
“சவேந்திர சில்வா என்பவர் நாட்டுக்காக சேவையாற்றிய ராணுவ வீரர். அவர் அப்படியான முடிவை எடுக்க மாட்டார். அரசியல் பற்றி அவர் பேச விரும்புவதில்லை.
மாகாணசபைத் தேர்தல் பற்றி நான் அவருடன் கதைக்கவில்லை. அவ்வாறு கதைத்திருந்தால்கூட என்னை திட்டி இருப்பார்.
எனவே, மேற்படி தகவல் போலியானது. ஆளுங்கட்சியின் சலவை இயந்திரங்களே இப்படியான தகவல்களை பரப்பி வருகின்றன. கட்சி மட்டத்திலும் இது பற்றி கலந்துரையாடப்படவில்லை.
சவேந்திர சில்வாவை அரசியலுக்கு கொண்டுவருவதற்கு நான் முயற்சி எடுக்கின்றேன் என்ற தகவலும் பிழை.” – என்றார்.





