தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: சஜித் கூட்டணிக்குள் குழப்பமா?
தமது உரிமைகளுக்காகத் தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்தாலும், ஐக்கிய மக்கள் கூட்டணியுடனான அவர்களின் பயணத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. அவர்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்தே பயணிப்பார்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“தமிழ் பேசும் கட்சிகள் எம்முடன் ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே செயற்பட்டு வருகின்றன. எமது தரப்புடன் அந்தக் கட்சிகளுக்கு எவ்விதப் பிரச்சினையும் கிடையாது.
தமது உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காகவே அவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர். எனவே, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் அவர்களின் பயணம் தொடரும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.
அவர்கள் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து செயற்பட்டாலும், எமது இலக்கு ஒன்றுதான். தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
எமது கூட்டணிக்குள் எந்தவொரு பிளவும் இல்லை; இனிமேலும் பிளவு ஏற்படாது. அவர்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து செயற்படுவது எமக்கு ஒரு பிரச்சினையே அல்ல. தேசிய மட்டத்திலான ஒரு பொதுவான நடவடிக்கையின்போது அவர்கள் அனைவரும் எம்மோடு ஒன்றிணைவார்கள்” என்றார் திஸ்ஸ அத்தநாயக்க .




