சவூதி மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து ஈராக் விசாரணை
சவூதி அரேபியாவை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஈராக் தெரிவித்துள்ளது.
ஈராக் எல்லைக்குள் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி அரேபியா தெரிவித்திருந்த நிலையில், அதன் சூழ்நிலைகளை ஆய்வு செய்து வருவதாக ஈராக் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், நாட்டின் வான்வெளியில் ட்ரோன் ஏவப்பட்டதை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய ஈராக், இதுதொடர்பாக சவூதி அரேபியாவுடன் தகவல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சகோதர நாடுகளை குறிவைக்கும் எந்தவொரு தாக்குதலையும் தாம் ஆதரிக்கவில்லை என்ற தனது நிலைப்பாட்டையும் ஈராக் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.





