போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் இரு நாடுகளும் வியாழக்கிழமை உடன்பாட்டை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த உடன்பாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என ஈரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது எட்டப்பட்டுள்ள உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரியவருகின்றது.
இதன் மூலம், ஈரானின் அணுசக்தி திட்டம் போன்ற கடினமான பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு பேச்சுவார்த்தையாளர்கள் விவாதிக்கும் அதே வேளையில், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து தடையின்றி இயங்க அனுமதிக்கப்படும்.
வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் தலைமைகளால் இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கிய இந்த மோதலுக்குப் பிறகு அமைதியை நோக்கி எடுக்கப்படும் மிக முக்கிய நகர்வாக இது கருதப்படும்.
ஏப்ரல் தொடக்கத்தில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து நிகழ்ந்த பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.





