லெபனான் தாக்குதல் தொடர்ந்தால் அமீரகம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் – ஆய்வாளர் எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ஈரான் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “தற்போது இரண்டு முக்கிய பதற்ற நிலைகள் உருவாகியுள்ளன. ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில், மற்றொன்று லெபனானில். ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன், அந்த உடன்பாட்டிலிருந்து லெபனான் விவகாரத்தை தனியே பிரிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயற்சித்து வருகிறார் போல தெரிகிறது,” என்றார்.
மேலும், ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதல்கள் குறித்து தெரிவிக்கையில், “அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க, பாரசீக வளைகுடா பகுதியில் இராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் முயற்சிகளை டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்,” எனவும் அவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
“அமெரிக்க அழுத்தத்துக்கு பதிலடி கொடுக்கவும், அவர்களுக்கு சவால் விடவும் ஈரான் புதிய நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது,” என்றார்.
இதேவேளை, “இஸ்ரேல் லெபனானை தொடர்ந்து தாக்கினால், ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை அதற்கான பதிலடி இலக்காகக் கருதும் சூழ்நிலை உருவாகலாம்,” என்றும் முகமது இஸ்லாமி எச்சரித்துள்ளார்.




