திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சுத்திகரிப்பு பெண் ஊழியரொருவர் ஹொரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த ஊழியரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 36 கிரேம் 180 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
திருகோணமலை என்சி வீதியில் வசித்து வந்த குறித்த பெண் , தற்காலிகமாக திருகோணமலை நாலாம் கட்டை லைட் வீதியில் வசித்து வருவதாகவும் , அவர் பல வருடங்களாக திருகோணமலை பொது வைத்திய சாலையில் சுத்திகரிப்பு தொழிலாளியாக கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருக்கும் இடமாக வைத்தியசாலையின் அரை ஒன்றினை பயன்படுத்தி வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இருந்த போதிலும் குறித்த விடயம் தொடர்பில் வைத்தியசாலை உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனாலும் தொடர்ச்சியாக குறித்த சுத்திகரிப்பு தொழிலாளியான பெண் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் இதனை அடுத்து நேற்று (10) சோதனையிட்டபோது அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும் திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 51 வயதுடைய பெண்ணை திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் , விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




