கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்தை இன்று (21) வந்தடைந்தது.
இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய இந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த டைவிங் ஆதரவு கப்பல் வகையைச் சார்ந்த இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சைலேஷ் குமார் தியாகி (Sailesh Kumar Tyagi) செயற்படுகின்றார்.
குறித்த போர்க்கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இலங்கைக் கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளினதும் முக்குளிப்புப் பிரிவுகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இக்கப்பலின் பணியாளர்கள் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதுடன், கலாசார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.





