ஈரான் கப்பல் விடயத்தில் இந்தியாமீது பழிசுமத்த கூடாது: செல்வம் எம்.பி.
“இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க போர்க்கப்பல் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது.”
இவ்வாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் Selvam Aadikalanathan தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு கூறினார்.
“ஈரான் போர்க் கப்பல் இலங்கைக்கு அருகில் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவே பொறுப்பு என்றெல்லாம் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர். இது ஏற்புடைய கருத்து அல்ல.
இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டபோதெல்லாம் இந்தியாவே உதவியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் டித்வா புயல் போன்ற நெருக்கடி நிலைகளின்போது இந்தியாவே முதலில் நேசக்கரம் நீட்டியது.
இந்தியாவில் பயிற்சி காலம் முடிந்த பின்னர் நாடு திரும்பும் வழியில் இலங்கை வருவதற்கு ஈரான் கப்பல் அனுமதி கேட்டதாக கூறப்படும் நிலையில் ஏன் இந்தியாவை குறை சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை.
இந்த விடயத்தில் நீங்கள் இந்தியாவை குற்றஞ்சாட்டக்கூடாது. குற்றஞ்சாட்ட இயலாது. அவ்வாறு குற்றஞ்சாட்டுவது தவறான விடயாகும்.” என செல்வம் அடைக்கலநாதன் மேலும் குறிப்பிட்டார்.





