முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட கைது: பின்னணி என்ன?
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் முறையற்ற கடற்படை நியமனம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரமே அவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொள்வதற்காக, நிறைவேற்று அதிகாரிகளுக்கான நிலையான ஆட்சேர்ப்பு தகைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த விசாரணை முக்கியமாக கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன், பிரித்தானிய ராயல் கடற்படைக் கல்லூரியில் (Britannia Royal Naval College) அவர் பயிற்சி பெறுவதற்காக பொதுப்பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையில் அவரது பங்களிப்பு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, ஜூன் 16ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கரன்னாகொடவுக்கு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும்,, தனக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பாணை கிடைக்கவில்லை எனக் கூறி அவர் அன்றைய தினம் முன்னிலையாகவில்லை.
இந்த விசாரணை தொடர்பில் யோஷித ராஜபக்ச ஏற்கனவே ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





