அமெரிக்கத் தாக்குதலில் அழிக்கப்பட்ட அலி கமேனியின் இல்லத்தின் முதல் காணொளி வெளியானது
தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இல்லம் மற்றும் வளாகம் அழிக்கப்பட்டதன் முதல் காணொளியை ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அவரது இறுதிச் சடங்கின்போது இந்தக் காணொளி வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில் 86 வயதான அலி கமேனி வீரமரணம் அடைந்தார்.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் உச்ச தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர், அதேவேளையில் அவரது மகனும் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா அலி கமெனியும் காயமடைந்தார்.
ஈரான் வெளியிட்ட 35 வினாடி காணொளியில், அந்த வளாகத்தினுள் உள்ள இமாம் கொமேனி ஹுசைனியா மண்டபம் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
அக்காட்சிகளில் சிதைவுகள், இடிந்து விழுந்த கட்டமைப்புகள், வளைந்த உலோக உத்திரங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகள் தெளிவாகத் தெரிகின்றன.
இந்த மண்டபம் முக்கியக் கூட்டங்களுக்கும் பொது உரைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் இன்று அலி கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதன் மூலம் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த இறுதிச் சடங்குகளின் தொடர் முடிவுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நேரத்தில் தெஹ்ரான், கோம், நஜாஃப் மற்றும் கர்பலா ஆகிய இடங்களில் பெரிய கூட்டங்கள் நடைபெற்றன. மறுபுறம், அப்பகுதியில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாக்கும் பெயரில் ஈரான் மீது புதிய தாக்குதல்களை அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்கள் போர் நிறுத்தம் மற்றும் நீடித்த அமைதி ஒப்பந்தம் குறித்த நம்பிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதுடன், மற்றொரு பெரிய மோதல் ஏற்படுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது.




