பிரித்தானியாவில் ஒளிந்திருந்த புலம்பெயர்ந்த சிறுவன் – 1500 பவுண்டு அபராதம் பெற்ற தம்பதி

பிரித்தானியாவில் தங்களது வாகனத்தில் ஒளிந்திருந்த 16 வயது புலம்பெயர்ந்தவரை பற்றி முறைப்பாடு கொடுத்த தம்பதிக்கு 1,500 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருந்த மிதிவண்டிகளுக்குப் போடப்பட்டிருந்த உறையினுள் சிறுவன் மறைந்திருந்ததைத் தம்பதி கண்டதும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிரான்ஸிலிருந்து அவர்கள் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டனர். ஆனால், சிறுவன் வாகனத்தில் ஏறியதை அவர்கள் கவனிக்கவில்லை.
எல்லைகளைக் கடந்தபோது அதிகாரிகளும் வண்டியில் மிதிவண்டிகள் இருந்த பகுதியைச் சோதனை செய்யவில்லை.
பயணம் முடிந்து வீடு திரும்பிய பின்புதான் அந்த சிறுவன் அவர்கள் வாகனத்தில் ஒளிந்திருந்ததை அறிந்தனர்.
சட்டவிரோதமாக ஒருவர் வாகனத்தில் ஒளிந்துகொண்டு எல்லையைக் கடப்பதைத் தடுக்கத் தவறியதற்கு உள்துறை அலுவலகம் அவர்களுக்கு அபராதம் விதித்தது.
சட்டத்தை மீறியவர் பற்றி புகார் கொடுத்ததற்கு அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ளதாய்த் தம்பதி வருத்தப்பட்டனர். அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.