தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 03 மசோதாக்களும் மக்களவை வாக்கெடுப்பில் தோல்வி
தொகுதி மறுசீரமைப்பு, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களுக்கும் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதாக்கள் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் ஆதரவாக தேவை. அந்த வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற 326 வாக்குகள் தேவை. அது கிடைக்காத காரணத்தால், மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்தன.
இன்றைய விவாதத்தின்போது, நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதற்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிமுறைகளின்படியே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
ராகுல் காந்தி பேசும்போது, “மத்திய அரசு கொண்டுவரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உண்மையில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அல்ல. மாறாக, தேசத்தின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி” என்று சாடினார்.





