வடகொரியாவின் முக்கிய அறிவிப்பு : விரைந்து செல்லும் சீன ஜனாதிபதி!
சீனத் தலைவர் ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்குப் பயணம் மேற்கொள்வார் என இரு நாடுகளும் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளன.
வரும் திங்கட் கிழமை வடகொரியா செல்லும் ஷி ஜின்பிங், செவ்வாய்க்கிழமை வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என இரு நாடுகளின் அரசு ஊடகங்களும் சுருக்கமான செய்திகளில் தெரிவித்துள்ளன.
அணு ஆயுதங்களைக் கொண்ட தனது அண்டை நாடான வட கொரியாவுடன் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்த சீனா எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, உக்ரைனுக்கு எதிரான போருக்கு ஆதரவாகப் படைகளையும் ஆயுதங்களையும் அனுப்பி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் பியோங்யாங் மீதான தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டவும், வடகிழக்கு ஆசியாவில் தனது மூலோபாய நலன்களைப் பாதுகாக்கவும் சீனா முயல்வதாக சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஆய்வாளர் வில்லியம் யாங் (William Yang) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாட்டின் அணுசக்திப் படைகளை “அதிவேகமாக” வலுப்படுத்தும் திட்டங்களை கிம் அறிவித்துள்ள நிலையில் சீன ஜனாதிபதியின் இந்த விஜயம் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக மாறியுள்ளது.





