போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லா: படைகளை வாபஸ்பெற இஸ்ரேல் மறுப்பு!
லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது.
இந்நிலையில் லெபனானில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று இஸ்ரேலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் மேற்கொள்வதற்கு லெபனானில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளது.
மேலும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தான் நேரடியாகப் போரில் தலையிட நேரிடும் என்றும் ஈரான் ச எச்சரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேலுக்கும் லெபனான் அரசாங்கத்திற்கும் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் (Naim Qassem) நிராகரித்துள்ளார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு தரப்பாக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லாவின் இந்த நிராகரிப்பு குறித்து இஸ்ரேல் அல்லது லெபனான் தரப்பிலிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.
இதற்கிடையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், லெபனானில் அமைதி முயற்சிகள் முன்னேற்றம் கண்டு வருவதாகத் தான் நம்புவதாகவும், அந்த நாட்டுக்கு அமைதி தேவை என்றும் கூறினார்.
எனினும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரமாக நடத்தி வருகிறது.





