கனடாவில் தீவிரமடையும் மோசடி சம்பவங்கள் – பொது மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மோசடி சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களில் இந்த மோசடிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விடயத்தில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மையில், நோர்த் பே (North Bay) பகுதியில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 250,000 டொலர் பணமோசடி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த சில வாரங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள், இணைய சந்தை ஏமாற்றங்கள், காதல் மோசடிகள் மற்றும் பரிசு அட்டைப் மோசடிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்த் பே பகுதியில் ஒருவர் கடந்த ஜூலை மாதம் முதல் போலியான இணையதளம் மற்றும் கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகவும், அது முதலீட்டு மோசடியாக தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மிகவும் நவீனமான முறையில் மோசடிகள் இடம்பெறுவதாகவும், பல்வேறு வழிகளில் மக்கள் ஏமாற்றப்படுவதாகவும் அந்நாட்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





