பிரித்தானிய புகலிடக் கொள்கையில் மாற்றம்
பிரித்தானியாவின் புகலிடக் கொள்கையில் முக்கிய சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்கமைய புகலிடம் கோருவோருக்கான புதிய மற்றும் பாதுகாப்பான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது.
கனடாவின் புகலிட முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்ற அமைப்புகள், பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்கும் அகதிகளுக்குப் பொறுப்பேற்று (Sponsor) அழைத்து வர அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும், மேலும் இதன் மூலம் முதல் வருகையாளர்கள் 2027-இல் பிரித்தானியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகதிகளுக்கான பணி சார்ந்த வழிமுறை (Refugee work route) அடுத்த ஆண்டு தொடங்கும். இதன் மூலம் முதலாளிகள் அகதிகளுக்கு நிதியுதவி அளிக்க முடியும்.
இந்த புதிய திட்டங்களின் கீழ் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், இதற்குக் குறிப்பிட்ட வரம்பு (Capped) விதிக்கப்பட்டு, ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே இது தொடங்கப்படும்.
எந்தெந்த அமைப்புகள் நிதியுதவி வழங்கலாம் என்பதை உள்விவகார அமைச்சகமே கட்டுப்படுத்தும் மற்றும் விண்ணப்பதாரர்கள் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
புதிய பாதுகாப்பான வழிகளைத் திறக்கும் அதே வேளையில், போலி மற்றும் தேவையற்ற புகலிடக் கோரிக்கைகளைக் கண்டறிந்து அகற்றுவதற்காக, மனித உரிமைகள் மற்றும் நவீன அடிமைத்தனம் தொடர்பான சட்டங்களை (Modern slavery laws) அரசாங்கம் கடுமையாக மாற்றியமைக்க உள்ளது.





