கிழக்கில் காணிப் பிரச்சினை – தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் HEO அமைப்பு
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் காணிப் பிரச்சினைகளை முறையாக ஆவணப்படுத்தி, தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைக்கும் பணிகளை Human Elevation Organization (HEO) தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இதன் கீழ், பயிற்றப்பட்ட HEO தொண்டர்களால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் தனித்தனியாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேசத்தில் புளியங்குளம் விவசாய காணியை மீட்கும் நோக்கில் ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது.
அதேபோன்று குச்சவெளி, தென்னை மரவாடி, புல்மோட்டை, முத்துநகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பிலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதன் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆனைசுட்டகாடு–காரமுனை காணிப் பிரச்சினை தொடர்பில் இதுவரை 319 பேரின் தனிநபர் ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரவாதப் பிரச்சினைகளால் காணி உரிமையாளர்கள் இடம்பெயர்ந்தமை இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதியினூடாகவும் உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களின் இடம்பெயர்வுக்குப் பின்னர் குறித்த காணிகள் வனப்பகுதியாக்கப்பட்டதாகவும், கோரளைப்பற்று வடக்கு–வாகரை பிரதேச நிர்வாகத்தில் பாரபட்சமான அணுகுமுறைகள் காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், யுத்தத்திற்குப் பின்னர் குறித்த காணிகளில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு அண்மையில் பிரதேச செயலாளரால் வெளியேற்றல் கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளமை, காணி உரிமைப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
HEO, ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இப்பிரச்சினைகளுக்கான நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை நோக்கிய பரிந்துரை மற்றும் உரிமைசார் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.






