திருமலையில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ‘டிராக் 6’ (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கந்தளாய் – வான்எல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், மொறவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாய் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் முதலுதவிக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




