மே 17 இயக்கத்துடனும் தமிழ்த் தேசியப் பேரவையினர் சென்னையில் பேச்சு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், தமிழகத்தின் பிரபல தமிழ்த் தேசிய அமைப்பான ‘மே 17 இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்த விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையில் இடம்பெற்றது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் நெருக்கடிகள், சர்வதேச மட்டத்திலான மனித உரிமைப் போராட்டங்கள் மற்றும் தாயக – தமிழகத் தமிழர்களுக்கிடையிலான சமூக – பண்பாட்டு உறவுகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் அரசியல் விவகாரம் மற்றும் சர்வதேச ரீதியான சமூகக் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில், இருதரப்புக்கும் இடையே தொடர்ச்சியான பரஸ்பர ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது என்று தமிழ்த் தேசியப் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
தாயகத்திலும் சர்வதேச தளங்களிலும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு இவ்வாறான சந்திப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் இருதரப்புப் பிரதிநிதிகளும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை மற்றும் மே 17 இயக்கத்தின் முக்கிய உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




