புதிய கட்சி அடுத்த தேர்தலில் களமிறங்கும்: அண்ணாமலை அறிவிப்பு!
“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார். பாஜக தமிழக தலைவராகவும் பதவி வகித்தார்.
அண்மையில் பாஜக தமிழக தலைவராக புதியவர் நியமிக்கப்பட்டார். இதனால் சட்டசபைத் தேர்தலில்கூட அண்ணாமலை போட்டியிடவில்லை.
பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று அறிவித்தது.
இந்நிலையில், தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் கருத்து வெளியிட்டார்.
இதன்போது அண்ணாமலை கூறியவை வருமாறு,
“ நான் 2020, ஆகஸ்ட் 25 ஆம் திகதி பாஜகவில் இணைந்தேன். தமிழக மக்களுக்காக 6 ஆண்டு காலம் பணியாற்றுவதற்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில்தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும்;. எல்லோரும் சேர்ந்து, இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை.
எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன்.
ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது.
நான் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சி, தமிழகத்தில் அடுத்து நடைபெறும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்.
ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன். கடந்த டிசம்பர் முதலே கட்சி தலைமையுடன் முரண்பாடு இருந்தது.” – என்றார் அண்ணாமலை.




