இலங்கை – கியூபா இடையே சுகாதாரத் துறையை மேம்படுத்த புதிய இணக்கம்
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கியூபாக் குடியரசின் தூதுவர் பட்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) ஆகியோருக்கு இடையில், சுகாதாரத் துறை உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் அண்மையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகள் குறித்தும், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருங்கிய தொடர்புகளையும் நினைவு கூர்ந்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கினதும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கினதும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய வெற்றிகரமான நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் சுகாதாரத் துறையில் நீண்டகால மற்றும் மிகவும் வலுவான இருதரப்பு உறவு காணப்படுவதாகவும், கியூபா பெற்றுள்ள பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்ப (Biotechnology) அறிவு என்பன இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தூதுவர் பட்ரிசியா லாசரா குவேரா, கியூபாவின் நிதியுதவியின்கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொசுக்கட்டுப்பாட்டுத் திட்டங்கள், டெங்கு நோயை ஒழிப்பதற்காக கியூபாவின் நிபுணத்துவ அறிவை வழங்குதல், மருந்து மற்றும் தடுப்பூசி உற்பத்தி நடவடிக்கைகள் මෙන්ම இலங்கை மாணவர்களுக்கு கியூபாவில் மருத்துவக் கல்வியை வழங்குவதற்கான புலமைப்பரிசில் போன்ற துறைகளில் புதிய அணுகுமுறைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
கொவிட்-19 காலத்தில் கியூபாவினால் தயாரிக்கப்பட்ட ‘அப்தாலா’ (Abdala) போன்ற தடுப்பூசிகள் குறித்தும், அதற்கமைய எதிர்காலத்தில் தடுப்பூசி உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், இலங்கையைத் தாக்கிய சுனாமி பேரழிவு உள்ளிட்ட அவசர பேரிடர்கள் மற்றும் அவசர காலப்பகுதிகளில் தேவையான உதவிகளை வழங்க முடிந்தமையையும் தூதுவர் நினைவு கூர்ந்தார்.
சுகாதார சேவைகள், விளையாட்டு, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கான கியூபாக் குடியரசின் தூதுவர் பட்ரிசியா லாசரா பெகோ குவேரா மேலும் தெரிவித்தார்.
இதன்போது, அவசர காலங்கள் மற்றும் பேரிடர் சந்தர்ப்பங்களில் சிகிச்சை மையங்களுக்கு வெளியிலும் சென்று சிகிச்சை மற்றும் நோய் கண்டறிதலுக்கு பயன்படுத்தக்கூடிய, கியூபாவில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சிறப்பு மருத்துவப் பையினையும் (Medical Bag) தூதுவர் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.




