யாழ் விரிவுரையாளர் விரிவுரையாளர் கொலை சம்பவம் – வெளியான உண்மை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது
பொலிஸார் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் மரண விசாரணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.
விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர்.
இதன்போதே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியல் காலத்தையும் அன்றைய தினம் வரை நீடித்துள்ளனர்.
வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையானார்.
முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியதுடன், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகினார்.




