சிறைச்சாலை சம்பவத்தால் GSP+ வரிச்சலுகைக்கு ஆபத்தா?
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் சர்வதேசம்வரை சென்றுவிட்டது. எனவே, முறையான விசாரணை இடம்பெறாவிட்டால் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைகூட இல்லாமல்போகக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கூட்டு எதிரணிகள் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியவை வருமாறு ,
“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளித்து, அமைச்சு பதவியில் இருந்து விலகுமாறு ஹர்ஷன நாணயக்காரவிடம் கேட்டுக்கொள்கின்றோம். இப்படியான அரசியல் கலாசாரத்தையே தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தி இருந்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இன்று சர்வதேசம்வரை சென்றுள்ளது. மனித உரிமைப் பிரச்சினையாக மாறியுள்ளது.
எனவே, சம்பவத்துக்கு முழுப்பொறுப்பையும் ஏற்று, அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும்.இதுவிடயத்தில் தமக்குள்ள பொறுப்பை அரசாங்கம் கைவிட்டுவிடமுடியாது.” -என்றார் தயாசிறி ஜயசேகர.




