நெருக்கடியான சூழ்நிலையில் ஈரான் ஜனாதிபதி பதவி விலகியதாக தகவல்!
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் ( Mojtaba Khamenei) அலுவலகத்தில் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள கடிதமொன்றில், தற்போதைய சூழ்நிலையில் தன்னால் திறம்பட ஆட்சி செய்யவோ அல்லது தனது அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றவோ முடியவில்லை என்றும், எனவே பதவி விலக அனுமதி கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைக் கையாண்ட விதம் மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் தொடர்பாக பெஷெஷ்கியனுக்கும் IRGC தலைமைக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே அவர் பதவி விலக காரணம் என ஈரான் இன்டர்நேஷனல் மேற்கோள்காட்டியுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புத் துணைத் தலைவர் மெஹ்தி தபதபாயி ( Mehdi Tabatabaei) மேற்குறிப்பிட்ட தகவல்களை மறுத்துள்ளார்.
அவர் இட்டுள்ள எக்ஸ் பதிவில், போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஈரான் இன்டர்நேஷனல் அறிக்கை “பொய்யானது” என்றும் அது “ஊடக விளையாட்டுகளின்” ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளார்.




