இந்தியா, தென்கொரியாவுக்கிடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்தியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மையுங் Lee Jae Myung அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார்.
அவரை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய தென் கொரிய ஜனாதிபதி, பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார்.
அவரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் மோடி – தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மையுங் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், இரு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை எதிர்கால கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
பொருளாதாரம், வர்த்தகம், கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துறை, டிஜிட்டல் துறை, முக்கிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கல்வி, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.





