பாய்லர் வெடித்ததில் 10 பேர் பலி: 40 பேர் காயம்! சத்தீஸ்கரில் சோகம்!!
இந்தியா, சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 40 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அங்குள்ள பெரிய பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
பாய்லர் வெடித்ததற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





