வெடித்தது பூகம்பம் – அமீரிடம் மன்னிப்பு கேட்டார் ஞானவேல் ராஜா
பருத்திவீரன் படத்தின் பிரச்சனை குறித்து தான் பேசியது இயக்குனர் அமீரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் ரிலீசாகி 17 ஆண்டுகள் ஆனாலும் அப்படத்தின் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. படம் வெற்றிபெற்று மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி இருந்தாலும், அதன் ஷூட்டிங் சமயத்தில் அமீருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை கோர்ட் வரை சென்றுவிட்டது.
அந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி மிகவும் வைரல் ஆனது.
அதில் அமீரை திருடன் என அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், அமீர் பற்றி தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‘பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.