ஓமந்தையில் கொலையில் முடிந்த மோதல் : ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!
வவுனியா – ஓமந்தை பகுதியில் கோயிலின் கதவை அத்துமீறி திறக்க முயன்ற குழுவினருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் கொலையில் முடிந்துள்ளது.
வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.
இதற்கு அந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண் மீது அக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப் பெண்ணின் மகன் மேற்படி குழுவினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில், அது பின்னர் மோதலாக மாறி கொலையில் முடிந்துள்ளது.
சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனையோரை கைது செய்ய தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





