ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் 30 நாள் காலக்கெடு விதிக்கலாம்!
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க 30 நாள் காலக்கெடுவை ஈரான் விதிக்கக்கூடும் என்று அந்நாட்டின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரியான மஜித் ஷாகேரி (Majid Shakeri,) தெரிவித்துள்ளார்.
ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் “இந்த முன்மொழிவின்படி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகே, ஈரானிய நிர்வாகத்தின் கீழ் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமாகும் என்று தெஹ்ரான் அறிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் சேவைக் கட்டணங்களை வசூலிப்பது குறித்த ஒரு முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது என்று ஈரானின் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட கட்டணங்கள், கப்பல் போக்குவரத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கடல்சார் சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றுடன் ஓரளவு தொடர்புடையதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், இந்த முக்கிய நீர்வழிப்பாதை வழியாக வணிகப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் இன்னும் முடங்கியுள்ளதால், இந்த நீர்வழிப்பாதையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.





