பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நெதன்யாகு வெளியிட்ட செய்தி : அமைதி திரும்புமா?
ஈரான் தனது திறன்களை தக்கவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அங்கு செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
CBS “60 Minutes, நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த செவ்வியில் மேலும் தெரிவித்த அவர், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் “பெரும்பான்மையானவற்றைச் சாதித்துள்ளது, ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை” என்று கூறியுள்ளார்.
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவிடவில்லை, தனது அணுசக்தி தளங்களை அகற்றவில்லை, தனது பிராந்திய முகவர்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவில்லை, அல்லது தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்திற்கு எந்த வரம்புகளையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகளின் முக்கிய இலக்காக இருக்கும் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எவ்வாறு கையாள்வது என்று நெறியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த நெதன்யாகு, அதை ஈரானிலிருந்து நேரடியாக அகற்ற முடியும் என்றார்.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதற்கான காலக்கெடுவை வெளியிட மறுத்த நெதன்யாகு, அதனை “மிகவும் முக்கியமான பணி” என்று குறிப்பிட்டுள்ளார்.




