நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனம்!
நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் (Wellington), இரவு முழுவதும் பெய்த கனமழையைத் தொடர்ந்து, இன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வெலிங்டன் மேயர் ஆண்ட்ரூ லிட்டில் (Andrew Little), இரவு முழுவதும் பெய்த இந்தத் தீவிர மழையைப் போன்ற ஒன்றை “முன்னெப்போதும் கண்டதில்லை” என்று கூறினார்.
ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நகரில் 77 மி.மீ மழை பெய்ததாகவும், இதுவே இதுவரை பதிவானதிலேயே மிக அதிகமான மழை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மேயர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நியூட்டவுன் (Newtown), ஐலண்ட் பே (Island Bay) மற்றும் கிங்ஸ்டன் ( Kingston) போன்ற புறநகர்ப் பகுதிகளில் வானிலை தொடர்பான 150-க்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு அவசரகாலக் குழுவினர் பதிலளித்துள்ளனர்.





