தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தடுப்பு அகற்றப்பட்டது
லெபனான் தெற்கு பகுதியில், டயர் நகரை இணைக்கும் முக்கிய வீதியில் அமைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய மண் தடுப்பு ஒன்றை லெபனான் இராணுவம் அகற்றியுள்ளது.
இது குறித்து லெபனான் ஆயுதப் படைகள் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த பணியில் ஒரு சிறப்பு இராணுவப் பிரிவு ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அப்பகுதியில் ஒரு கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், டயர்–ஃபல்சியே பகுதிகளை இணைக்கும் பாலத்தின் புனரமைப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக சிமெண்டு பாதை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் தெற்கு லெபனானின் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து நடத்திய தாக்குதல்கள், அந்த பகுதியை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் தாக்குதலால் இடம்பெயர்ந்திருந்த நூறாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், முக்கிய வீதிகள் மற்றும் பாலங்களை விரைவாக சீரமைக்கும் பணியில் லெபனான் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




